விருதுநகர்
அருப்புக்கோட்டையில் மீண்டும் தலைத் தூக்கியுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டால் 20 நாள்களுக்கு மேலாக தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் தற்போது மீண்டும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த 20 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் இல்லாததால் மக்கள் அதிக விலை கொடுத்து தனியாரிடம் குடிநீர் வாங்கும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
அருப்புக்கோட்டையின் குடிநீர் ஆதாரங்களான தாமிரவருணி மற்றும் திருப்புவனம் வைகை ஆற்றுப் பகுதி ஆகிய இரண்டு இடங்களிலிருந்தும் தண்ணீர் பெற்றுவந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருப்புவனம் பகுதியிலிருந்து வறட்சி காரணமாக தண்ணீர் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, இரண்டு மாதங்களுக்கு முன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருப்புவனம் பகுதி ஆழ்துளைக் கிணறுகளையும், நீர்வரத்துக் குழாய்களையும் உரிய பராமரிப்புப் பணிகள் மூலம் சீர்செய்ய நடவடிக்கை எடுத்தார். அதன்பின்னர், தொடர்ந்து ஒன்றரை மாதங்களாக சீரான இடைவெளியில் குடிநீர் கிடைத்து வந்தது.
தற்போது, மீண்டும் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக குடிநீர் கிடைக்காததால், மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு உடனே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், குடிநீர்ப் பிரச்சனையை தீர்த்து, சீரான இடைவெளியில் குடிநீர் வழங்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.