
சிவகங்கை
சிவகங்கையில் உள்ள மாவூர் அணையில் பரிசலில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் 'செல்பி' எடுத்தபோது பரிசல் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கிய துணிக்கடை ஊழியர் சடலமாக மீட்கப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த ஆலங்குளத்தைச் சேர்ந்த கணேசன் மகன் செண்பகமூர்த்தி (28). இவர் மதுரையில் உள்ள துணிக் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடன் நிலக்கோட்டை தாலுகா மட்டப்பாறையை சேர்ந்த குமார் (28), மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ் (24) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த 12-ஆம் தேதி மாலையில் குமார், நண்பர்கள் செண்பகமூர்த்தி, முத்துராஜ், மட்டப்பாறையைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் பள்ளப்பட்டி மாவூர் அணையின் உள்பகுதியில் பரிசலில் சென்றனர்.
அப்போது, தண்ணீரின் ஆழமான பகுதிக்குச் சென்ற அவர்கள் செல்போனில் ‘செல்பி’ எடுத்தனர். அப்போது நிலை தடுமாறி பரிசல் தண்ணீரில் கவிழ்ந்தது.
இதில் செண்பகமூர்த்தி, குமார், முத்துராஜ், கார்த்திக் ஆகிய நால்வரும் தண்ணீரில் விழுந்தனர். குமார், முத்துராஜ், கார்த்திக் ஆகியோர் நீச்சல் அடித்து கரைக்கு வந்தடைந்தனர். ஆனால், செண்பகமூர்த்தி மட்டும் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
இதுகுறித்து நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதையொட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி ஜோசப் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து மாவூர் அணையில் தண்ணீரில் மூழ்கிய செண்பகமூர்த்தியை தேடி வந்தனர்.
திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் இருந்து படகு கொண்டுவரப்பட்டு அதில் ஏறி தீயணைப்பு படையினர் செண்பகமூர்த்தியை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் செண்பகமூர்த்தியில் உடல் தண்ணீரில் மிதந்தது. இதையடுத்து அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், உதவி ஆய்வாளர் ரபீக் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தண்ணீரில் மூழ்கி இறந்த செண்பகமூர்த்திக்கு மீனாள் என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.