தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 2021-ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுவிற்கும் டாக்டர் அம்பேத்கர் விருது உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சந்துருவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 2021-ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுவிற்கும் டாக்டர் அம்பேத்கர் விருது உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சந்துருவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விருதுக்கான பரிசுத்தொகை ரூ.1 லட்சம் என்றிருந்த நிலையில், அது தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விருது பெற்றோருக்கு தங்கப்பதக்கம், விருதுக்கான பரிசுத்தொகை, தகுதியுரை ஆகியவற்றை ஜன.15ம் தேதியான திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காகப் பாடுபடுவர்களைச் சிறப்பு செய்யும் வகையில் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை" வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டிற்கன சமூகநீதிக்கான "தந்தை பெரியார் விருது" திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான திருநாவுக்கரசுவுக்கு வழங்கிடவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் "டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது" வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021-ஆம் ஆண்டிற்கான "டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது" சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துருவுக்கு வழங்கிடவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டிற்கான “சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது’’ “டாக்டர் அம்பேத்கர் விருது" மற்றும் விருதாளர்களுக்கான பரிசுத் தொகையை ரூபாய் ஐந்து இலட்சமாக உயர்த்தியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணை! | | pic.twitter.com/Le1hnFGL9F
— TN DIPR (@TNDIPRNEWS)எழுத்தாளர் திருநாவுக்கரசு, திராவிட இயக்க வேர்கள், திராவிட இயக்கத் தூண்கள் போன்ற பல்வேறு வரலாற்று நூல்களையும் எழுதி தமிழ்ச்சான்றோர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துப்பணியைப் போற்றிப் பாராட்டும் வகையில் கடந்த 2006-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது அப்போதைய முதல்வர் கருணாநிதி இவருக்கு வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதியரசர் சந்துரு, தனது பணிக்காலத்தில் அளித்த பல்வேறு தீர்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் காப்பதாக அமைந்திருந்ததாகவும், சாதிய வேறுபாடுகள், ஒடுக்கப்பட்டோர், பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினர் உரிமை மறுப்பு ஆகியவற்றிற்கு எதிரான இவரது தீர்ப்புகளால் மக்களிடையே மிகுந்த நன்மதிப்பை பெற்றார். தமிழகம் முழுவதும் பயணம் செய்து விளிம்பு நிலை மக்களுடன் வாழ்ந்து தமிழ்ச் சமூகம் மற்றும் பண்பாட்டின் பன்முகத்தன்மையை புரிந்துக்கொண்டு செயலாற்றினார் என அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
நீதியரசர் சந்துருவின் வழக்கறிஞர் கால வாழ்வியலையொட்டி புனையப்பட்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான், சமீபத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பல தரப்பட்ட விமர்சனங்களையும் பெற்ற ‘ஜெய் பீம்’ திரைப்படமென்பது குறிப்பிடத்தக்கது.