
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிகம் பேர் இறக்காமல் இருக்க டீனாக பதவி ஏற்பவர் குறைந்தது ஒரு வருடமாவது பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதேபோல நேற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி பிரெய்லி அரங்கில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜாண் விக்டர்தாஸ் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் ஆட்சியரகம் வந்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், "நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.
அப்படியிருக்க மருத்துவமனையில் போர்வை, தலையணை, மெத்தை, கட்டில் போன்ற உபகரணங்கள் மிகவும் பழமையானதாக உள்ளன.
மேலும், 2017-ஆம் ஆண்டில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, மாதத்தில் ஏராளமானோர் இறப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 25-12-2017 அன்று தீவிர சிகிச்சை பிரிவில் ஏ.சி. இயங்கவில்லை. அன்றைய தினம் மட்டும் நால்வர் இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
மேலும், சிகிச்சைக்கு உள்நோயாளியாக சேர்க்கப்படுபவர்கள் குணமடையும் முன்பே நோயாளிகளிடம் கேட்காமலேயே ‘டிஸ்சார்ஜ்’ செய்கிறார்கள்.
இந்தப் பிரச்சனைகளுக்கு காரணம், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைய்ல் டீன் பதவிக்கு வருபவர்கள் பணி ஓய்வுபெறும் தருவாயில் நியமிக்கப்படுவதே. இதனால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, டீனாக பதவி ஏற்பவர் குறைந்தது ஒரு வருடமாவது பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.