
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் உள்ள விளையாட்டுத் திடலை குப்பைக் கிடங்காக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மக்களோடு சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூரை அடுத்துள்ளது புதுப்பட்டினம் ஊராட்சி பகுதியில் உள்ள 20 கண் பாலம் அருகே உள்ளது காந்திநகர். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்தப் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் விளையாட்டு திடலுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் இராட்சத பள்ளம் தோண்டப்பட்டு அதில் புதுப்பட்டினம் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரும் குப்பைகளை வந்து கொட்டினர்.
இதன் அருகே குடிநீர் தொட்டிக்கான குழாய்கள் செல்வதால் தண்ணீர் அசுத்தமாகும் நிலையும் உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் அந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், புதுப்பட்டினம் ஊராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காந்திநகர் விளையாட்டு திடலை குப்பைக் கிடங்காக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் கவுன்சிலர் முருகேசன் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் செந்தில்குமார், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவி கலைச்செல்வி, நிர்வாகி நசீர் மற்றும் காந்திநகர் பகுதியை சேர்ந்த மக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் துரை அங்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை ஏற்றுக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.