பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் நேற்று மாலை சிபிசிஐடி போலீஸார் 6 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. பேராசிரியை வீட்டில் இருந்து சில டைரிகள், புகைப்படங்கள், கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், பென்டிரைவ், சிடி உள்ளிட்டவற்றையும் போலீஸார் கைப்பற்றினர்.
கல்லூரி மாணவிகளை பாலியல்ரீதியாக தவறாக வற்புறுத்தியதாக உதவி பேராசிரியை நிர்மலா தேவி கடந்த வாரம் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு, அடுத்த நாள் இரவு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதையடுத்து, சிபிசிஐடிக்கு இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டன. அதையடுத்து, நேற்று முன்தினம் 5 நாள் காவலில் எடுத்து நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி காவியன் நகரில் உள்ள நிர்மலா தேவியின் வீட்டில் நேற்று சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தத் திட்டமிட்டு அங்கு சென்றனர். நிர்மலா தேவியின் சகோதரர் ரவி, வீட்டைத் திறந்து காட்டினார். அதையடுத்து, வீட்டுக்குள் நுழைந்த போலீஸார் 6 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் சில டைரிகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று காலை நிர்மலா தேவியிடம் விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் 2-வது நாளாக சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி மட்டும் தனியாக விசாரணை நடத்தினார்.
சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழுவினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 3வது நாளாக நேற்று காலை 11 மணிக்கு பதிவாளர் சின்னையா அறைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அவரிடம் பகல் 12.30 மணி வரை விசாரணை நடந்தது. சிபிசிஐடி டிஎஸ்பி கருப்பையா தலைமையில் மற்றொரு குழுவினரும் பதிவாளரிடம் விசாரணையை தொடர்ந்தனர்.
பின்னர் அகடமிக் ஸ்டாப் காலேஜ் அலுவலக அறையில் இயக்குநர் கலைச்செல்வனிடம் விசாரணை நடத்தினர். அங்கு நடத்திய சோதனையில் சிக்கிய சில ஆவணங்களுடன், மீண்டும் பதிவாளர் அறைக்கு சென்று நேற்றிரவு வரை தொடர்ந்து நடந்தது, இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாம்‘‘ விருந்தினர் விடுதியில் ஒருநாளைக்கு ரூ.125 வாடகையில் 9 நாட்கள் நிர்மலாதேவி தங்கியதற்கு செலுத்திய தொகை ரூ.1,125க்கான ரசீது நகல் உள்ளிட்ட ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் பெற்றுச் சென்றனர்.
இதற்கு முன்பு அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி காவியன் நகரில் உள்ள நிர்மலா தேவியின் வீட்டை சிபிசிஐடி போலீசார் நேற்று மாலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை சோதனை நடத்தினர். அங்கு, நிர்மலாதேவி பயன்படுத்திய கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க், பென்டிரைவ், சிடி உள்ளிட்ட பொருட்களையும், 3 பை நிறைய ஏராளமான ஆவணங்களையும் எடுத்துச்சென்றனர். வீட்டைப் பூட்டி சீல் வைத்தனர்.