
விதிமுறைகளின் படி மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு நடைபெறவில்லை என கூறி சென்னையில் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 13 கல்லூரிகளில் மட்டும் மருத்துவப் பட்ட மேற்படிப்புகள் இருக்கின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு 562 இடங்கள், மருத்துவப் பட்டய மேற்படிப்புக்கு 200 இடங்களும் மாநில அரசுக்கு உள்ளன.
மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை முடிவடைந்தது.
அதைதொடர்ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வில் 67 பேர் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தைப் பெற்றனர். 364 பேர் மறு ஒதுக்கீட்டின் மூலம் படிப்புகளையும், கல்லூரிகளையும் மாற்றிக் கொண்டனர். வரும் 27-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில், விதிமுறைகளின் படி மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு நடைபெறவில்லை என கூறி சென்னையில் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அரசு மருத்துவர்களாக இல்லாதவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.