
சென்னை வியாசர்பாடி சுந்தரம் பிள்ளை நகர் அருகே ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. ஜீவா ரயில் நிலையத்துக்கு செல்வோர், இந்த தண்டவாள பாதையை பயன்படுத்துவார்கள். ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் செடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது.
இந்த பகுதி வழியாக ஜீவா ரயில் நிலையத்துக்கு செல்ல காலை சிலர் நடந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமான நிலையில் ரத்த வெள்ளத்தில் ஆண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. தலை, முகம் ஆகியவை கல்லால் சிதைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையில், ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், புதிய அண்ணாநகர், என்எஸ்சி போஸ் ரோட்டை சேர்ந்த கோவிந்தராஜ். இவரது மகன் தனசேகர் (22). கூலி தொழிலாளி. கடந்த 2 நாட்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது.
நேற்று முன்தினம் மாலை தனசேகர், வியாசர்பாடியில் உள்ள நண்பர் அருண் என்பவரை பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்து சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ், நேற்று வியாசர்பாடியில் உள்ள அருண் வீட்டுக்கு சென்றார். ஆனால், அங்கு அருண் இல்லை.இதையடுத்து, வியாசர்பாடி போலீசில், கோவிந்தராஜ் புகார் செய்தார்.
புகாரை பெற்ற போலீசார், தனசேகரின் அடையாளங்களை விசாரித்தனர். அதில், ரயில்வே தண்டவாளத்தில் மீட்கப்பட்ட சடலத்துடன் ஒத்துபோனது. இதையடுத்து கோவிந்தராஜை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சடலத்தை காண்பித்தனர்.
அதை பார்த்த கோவிந்தராஜ், தனது மகன் என உறுதி செய்து கதறி அழுதார். இதைத்தொடர்ந்து போலீசார், தனசேகர் எப்படி இறந்தார்? என தீவிரமாக விசாரிக்கின்றனர். மேலும், அவரது நண்பர் அருணை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.