வாராக் கடன்களை காரணம் காட்டி ஊதிய உயர்வை மறுத்துடாதீர்கள் - வங்கி ஊழியர்கள் வலியுறுத்தல்...

First Published May 31, 2018, 10:43 AM IST
Highlights
Do not refuse salary increases due to loans - urging bank staff


கரூர்
 
வாராக் கடன்களை காரணம் காட்டி ஊதிய உயர்வினை மறுக்க கூடாது என்று  வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்துள்ளனர். 

வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகோரி வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் மே மாதம் 30, 31-ஆம் தேதிகளில் (அதாவது நேற்றும், இன்றும்) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். 

அதன்படி, கரூர் மாவட்ட வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் அதன் கிளைகளில் பணியாற்றும் 1000-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால், பொதுத்துறை வங்கி மற்றும் அதன் கிளைகளில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வங்கியில் இருந்து பணம் எடுப்பது மற்றும் செலுத்துவது, காசோலை பரிவர்த்தனை போன்றவை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள்  பெரும் அவதி அடைந்துள்ளனர்.

கரூர் மாவட்ட வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கரூர் பழைய பைபாஸ்ரோடு பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி நரசிம்மன் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தேசிய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை உடனே தொடங்கி நியாயமான ஊதியத்தை வழங்க வேண்டும். 

வாராக் கடன்களை காரணம் காட்டி ஊதிய உயர்வினை மறுக்க கூடாது" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் வடிவேலன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்பட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

click me!