
நாளை மறுநாள் முதல் 7 ஆம் தேதி வரை ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் 13 இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளதாக கூறினார். சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார். தெற்கு ஆந்திரா, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர வாய்ப்புள்ளது என்றும் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் கூறினார். எனவே, டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படை ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.