கிருஷ்ணகிரி
உயர் மின் கோபுரங்களை விளை நிலங்களில் பதிக்க கூடாது என்று கிருஷ்ணகிரியில் பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "உயர் மின் கோபுரங்கள் மற்றும் மின் பாதைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சட்டபூர்வ இழப்பீடு வழங்க வேண்டும்",
உயர் மின் கோபுரங்களை விளை நிலங்களில் பதிக்க கூடாது
சாலை ஓரமாக கேபிள் வழியாக உயர்மின் கோபுரங்களை அமைக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சக்தி, குணசேகரன், சின்னராஜி, மாதலிங்கம், மணி, முத்து, திருநாவுக்கரசு, அன்பழகன், நடராஜ், விவேகானந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டெல்லிபாபு கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், "ஒரு நிறுவனம் தற்போது நமது மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்கள் வழியாக 10-க்கும் மேற்பட்ட டவர்லைன் திட்டங்களை விவசாய நிலங்கள் வழியாக, விவசாயிகள் அனுமதியின்றி, அத்துமீறி, மிரட்டி அமைத்து வருகிறது.
இதுகுறித்து எந்தவித சட்டபூர்வ இழப்பீட்டையும் வழங்காமல் பல்வேறு பொய் வாக்குறுதிகளை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.
எனவே, இந்தத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சட்டபூர்வ இழப்பீடு வழங்கிட வேண்டும்.
மாற்று வழியில் சாலை ஓரமாக கேபிள் வழியாக திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" என்று அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயச் சங்க மாநிலக் குழு பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், விவசாயிகள் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பிரகாஷ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராமசாமி, விவசாய சங்க மாவட்ட குழு வஜ்ஜிரவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்டக் குழு கந்தன் நன்றித் தெரிவித்தார்.