12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை; ஒருதலையாக காதலித்து வந்த மாணவனின் தொல்லையால் மாணவி விபரீத முடிவு...

First Published Mar 15, 2018, 6:44 AM IST
Highlights
12 class student suicide teased by a student who loved one side


கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஒருதலையாக காதலித்து வந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனும் அவரது நண்பனும் இணைந்து தொல்லை கொடுத்ததால் 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ளது தேவீரஅள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரின் மகள் தமிழரசி (17). இவர் அகரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் தமிழரசி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. 

மாணவி தமிழரசியை அதே பள்ளியில் படிக்கும் 17 வயதுடைய பன்னிரெண்டாம் வகுப்பு  மாணவர் ஒருவர் ஒரு தலையாக காதலித்து வந்தார். ஆனால், இந்த காதலை தமிழரசி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், பிளஸ்-2 படிக்கும் தனது நண்பரான மற்றொருவரை அழைத்துக்கொண்டு 12-ஆம் தேதி தமிழரசி வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார். 

அப்போது, தேர்வு எழுதிவிட்டு வந்த தமிழரசியை வழிமறித்து அவரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தமிழரசியிடம் இருந்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பிடுங்கி அதனை கிழித்து எறிந்துள்ளார். இதனால் மனமுடைந்த தமிழரசி தற்கொலை செய்து கொண்டது காவல் விசாரணையில் தெரியவந்தது.

இதில் தொடர்புடைய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழரசியின் தந்தை சங்கர் பாரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் கபிலன் வழக்குப்பதிந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு நேற்று முன்தினம் உடற்கூராய்வு முடிந்தது. ஆனால் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

மாணவி தற்கொலைக்கு காரணமான மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்களும், மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்த தகவலறிந்ததும் பர்கூர் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் அங்கு வந்தார். தமிழரசியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதனைத் தொடர்ந்து, தமிழரசியை தற்கொலைக்கு தூண்டுதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் 17 வயதுடைய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இருவர் மீதும் காவலாளர்கள் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

இதையடுத்து நள்ளிரவு 12.30 மணியளவில் மாணவி தமிழரசி உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். பின்னர் நேற்று சொந்த ஊரில் உடலை அடக்கம் செய்தனர்.

click me!