
தமிழகத்தில் விவசாயிகள் வாங்கி கடனை பெறுவதற்காக ஜப்தி நடவடிக்கை எடுக்க கூடாது என, வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்து போனது. இதனால் விவசாயிகள், தண்ணீர் இல்லாமல் தங்களது விவசாய தொழில் செய்ய முடியாமல் பெரிதும் பாதித்தனர். இதைதொடர்ந்து வங்கிகளில் பெற்ற விவசாய கடனை திரும்ப கொடுக்க முடியாமல் போனது. இதையொட்டி சுமார் 400 பேர் வரை தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில், விவசாயிகளின் கடன்களை திரும்ப கேட்கும் வங்கிகள், அவர்களது உடமைகளை ஜப்தி செய்வதாகவும், அதனை தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில், விவசாயிகள் சங்கம் சார்பில் மனு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகளிடம் கடனை கேட்டு எவ்வித தொல்லையும் தரக்கூடாது. அவர்களிடம் எவ்வித ஜப்தி நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றார்.
மேலும், கடனை வசூலிக்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும். விவசாயிகள் நலன் சார்ந்த விஷயத்தில், வங்கிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், இதுதொடர்பாக தமிழக அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இது 2வது முறையான உத்தரவு என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வரும் ஆகஸ்ட் 4ம் தேதிக்கு இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.