
தென்காசி மாவட்ட திமுக சார்பில் S.I.R பணிகளுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ''உங்கள் வாக்குகளை பறிக்க துடிக்கிறான் மோடி. அவன் இன்னொரு நரகாசுரன். அவனை தீர்த்துக் கட்டினால் தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும்'' என்று நாட்டின் பிரதமர் என்று கூட பாராமல் மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ளார் ஜெயபாலன்.
ஜெயபாலன் பேசும்போது அருகில் இருந்த தென்காசி எம்.பி ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ E.ராஜா அவரை பேச்சை கண்டிக்காமல் மெளனமாக இருந்ததற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலனை கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ''தென்காசியில் திமுக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குத் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலன் கொலை மிரட்டல் விடுத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
நாட்டின் அதிமுக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு தலைவரை, அதிலும், உலகமே போற்றும் மாபெரும் தலைவரைக் குறித்து எந்தவொரு மரியாதையுமின்றி, மேடை நாகரிகமுமின்றி கொலை மிரட்டல் விடுத்திருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது.
மெளனம் காத்த மக்கள் பிரதிநிதிகள்
அதிலும், உடனிருந்த தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் அவர்களும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அவர்களும் மாவட்டச் செயலாளரின் கொடூரப் பேச்சைத் தடுக்காமல் மௌனம் காத்திருப்பது ஒட்டுமொத்த திமுகவின் வன்முறை போக்கையும் வன்மத்தையும் வெளிப்படுத்துகிறது.
இதைத் தட்டிக் கழிக்க எத்தகைய சாக்குபோக்கை திமுக கூறினாலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பாரதப் பிரதமர் தமிழகத்திற்கு வரும் வேளையில், அவரது பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ள திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.