
இராமநாதபுரம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடத்திய காவலர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று இராமநாதபுரத்தில் தி.மு.க மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின்போது ஏற்பட்ட காவலாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 11 பேர் பலியானார்கள். மேலும், பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தூத்துக்குடி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்தில் நேற்று தி.மு.க. சார்பில் என்.எஸ்.கே.வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திவாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, திசைவீரன், முத்துராமலிங்கம்,
நகர் செயலாளர் நாசர்கான், அவை தலைவர் சண்முகம், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் வில்லாயுதம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் காந்தகுமார்,
விவசாய அணி அமைப்பாளர் சுந்தர்ராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மண்டபம் சம்பத்ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜயகதிரவன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு கருணாகரன், சி.ஆர்.செந்தில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, ஜஸ்டின் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
சம்பந்தப்பட்ட காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்,
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்,
இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும்" போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.