
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தில் இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த சேரன் தன்னுடைய போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட நடிகர் விஷால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வேண்டும் என்று கூறி தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இயக்குநர் சேரன் உள்ளிட் பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிட்டு வெற்றி பெற்று 8 மாதங்கள் ஆகியும் இது வரை எந்த நன்மையையும் செய்யாத நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், விஷால் போட்டியிட வேண்டுமா? என சேரன் கேள்வி எழுப்பி இருந்தார்.
நேற்று மாலை முதல் நடைபெற்று வரும் இந்த உள்ளிருப்பு போராட்டத்துக்கு நடிகர் ராதாரவி, நடிகை ராதிகா, இயக்குநர்கள் டி.ராஜேந்தர், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் விஷால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதால், தயாரிப்பாளர் சங்கத்துக்கு பாதகமாக அமையும் என்றும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கூறி வந்தனர்.
உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்றும், விஷால் தங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் சேரன் உள்ளிட்டோர் கூறி வந்தனர்.
இந்த நிலையில் நடிகர் விஷால், வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துக்கள் உள்ளதாகவும், சொத்து கணக்கு விவரங்கள் முறையாக குறிப்பிடததாலும் அவருடைய மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, இயக்குநர் சேரன் உள்ளிட்டவர்கள் தங்களுடைய உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சேரன், தங்களுடை போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறினார்.