
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில், அதிநவீன ஆளில்லாத விமானத்தை முதல்முறையாக தமிழக காவல்துறை பயன்படுத்தியுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா, தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க கீழச்செவல்பட்டி, காரைக்குடி உட்பட 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களுடன் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், கண்காணிக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
தேவர் குருபூஜையை முன்னிட்டு, காரைக்குடி பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல், இன்று வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, குருபூஜை விழாவுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள் உட்பட பலர் வருவதால், முதல்முறையாக அதிநவீன ஆளில்லாத விமானத்தை தமிழக காவல்துறை முதல்முறையாக கண்காணிப்பு பணியில் பயன்படுத்தியுள்ளது.