சமீபத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் தமிழகத்தில் சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.1 உயர்த்தப்பட்டது. மாநகரப் பேருந்துகளுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.12ல் இருந்து ரூ.19ஆக உயர்ந்தது. விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணம் 30 கிலோ மீட்டருக்கு ரூ.17ல் இருந்து ரூ.24ஆக உயர்த்தப்பட்டது. இந்தக் கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்களும், மாணவர்களும், அரசியல் கட்சியினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அரசின் இந்த கொள்கை முடிவையடுத்து மக்கள் ரயில் சேவையை அதிகம் பயன்படுத்த தொடங்கினர். கட்டணம் உயர்த்தப்பட்டும் போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று அரசு தரப்பு தெரிவித்தது.
இந்நிலையில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாநகர பஸ்களில் குறைந்த பட்சமாக உயர்த்தப்பட்ட ரூ.5 கட்டணம் தற்போது ரூ.4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாநகர பஸ்களில் 80 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதனால் பெரும்பாலான பஸ்கள் காலியாக ஓடின. தற்போது 40 சதவீதம் அளவிற்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிற சாதாரண பஸ்களில் குறைந்த பட்ச கட்டணமாக தற்போது ரூ.4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பஸ்களில் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.9 வசூலிக்கப்பட்டது.
அது ரூ.6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டீலக்ஸ் பஸ்சிற்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.13 கட்டணம் தற்போது ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வால்வோ ஏ.சி. பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.51 வசூலிக்கப்படுகிறது. அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணமாக ரூ.1 தற்போது வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு டிக்கெட்டுடனும் ஒரு ரூபாய் சேர்த்து புதிதாக வசூலிக்கப்படுகிறது.
விபத்து இன்சூரன்சுக்காக வசூலிக்கப்பட்ட இந்த கட்டணம் தற்போது சாதாரண பஸ்களுக்கு மட்டும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்ற எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களுக்கு வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் மற்ற மாவட்ட பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.18 ஆகவும் மாற்றி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. பேருந்து கட்டண குறைவு காரணமாக நாளொன்றுக்கு ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கட்டண குறைப்பைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கை விட வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் அதிகளவிலான கட்டணத்தை உயர்த்திவிட்டு தற்போது சொற்ப அளவில் கட்டணத்தை குறைத்துள்ளதாக கூறி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.