
திருப்பூர்
திருப்பூரில், வங்கியில் வாங்கிய ரூ.34½ கோடி கடனை திருப்பி செலுத்தாததால் பனியன் நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்த ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரை அடுத்த ஈட்டிவீரம்பாளையம் புதிய திருப்பூர் பகுதியில் "நேதாஜி அப்பேரல் பார்க்" என்ற பெயரில் தொழிற்பேட்டை ஒன்று உள்ளது. இங்கு 43 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், ஜெ.மார்க் லைப் ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் என்ற பனியன் ஏற்றுமதி நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளாக மும்பையை சேர்ந்த தினேஷ்கங்கா பிரசாத் ஜெய்ஸ்வால் மற்றும் அவரது மனைவி சுனிதா ஜெய்ஸ்வால் ஆகியோர் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர்கள் மும்பையைச் சேர்ந்த ஏ.ஆர்.எம். கிளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.34 கோடியே 65 இலட்சத்து 25 ஆயிரத்து 304-ஐ கடனாக பெற்றிருந்தனர். ஆனால், அந்த கடனை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவர்கள் திருப்பி செலுத்தவில்லை. எனவே, இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத சம்பந்தப்பட்ட பனியன் ஏற்றுமதி நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்த திருப்பூர் நீதிமன்றம் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி பனியன் ஏற்றுமதி நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று அவினாசி தாசில்தார் வாணி ஜெகதாம்பாள் மற்றும் அவினாசி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட அந்த பனியன் நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்றது.
இதற்காக அங்கு பெருமாநல்லூர் காவலாளர்கள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பின்னர் அந்த பனியன் நிறுவனத்தின் கதவுகள் இழுத்து மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.
வங்கியின் வாராக் கடனுக்காக பனியன் நிறுவனத்துக்கு ‘சீல்’ வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.