கோயம்புத்தூரில் நுழைவு பாலம் அமைக்க கோரி அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்…

First Published Jul 17, 2017, 8:03 AM IST
Highlights
Demonstration on behalf of all party parties to set up entrance bridge at Coimbatore


கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு பேருந்து நிலையம் முன்பு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் நுழைவு பாலம் அமைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவில் அனைத்துக் கட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் நுழைவு பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு குறிச்சி பகுதி கழகச் செயலாளர் குறிச்சி பிரபாகரன் தலைமை வகித்தார். கிணத்துக்கடவு நகர தி.மு.க செயலாளர் மார்கெட் சின்னச்சாமி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியச் செயலாளர் முகமது யாசின் தெற்க்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நெகமம் கே.வி.கே.சபரிகார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினர் கூறியது:

“கோவை ஈச்சனாரி முதல் கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி ஆச்சிப்பட்டவரை நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சாலையில் கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் இருந்து உயர்மட்டபாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் உயர்மட்ட பாலத்துடன் அனுகு பாலத்தை இணைப்பதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. இந்த அனுகுபாலம் அமையக் கூடிய இருபுறங்களிலும் அரசு அலுவலகங்கள் உள்ளன.

இதற்கிடையே உள்ள அண்ணாநகர், செம்மொழிக்கதிர்நகர், பகவதிபாளையம் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளுக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 750 மீட்டர் தொலைவில் உள்ள சிங்கராம்பாளையம் சென்று அங்கிருந்துதான் திரும்பி தங்களது வீட்டிற்குச் சென்று வர முடியும். இதனால் காலதாமதமாகும். விபத்துகளும் ஏற்படும்.

எனவே, கிணத்துக்கடவு பேருந்து நிலையம் முன்பு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் நுழைவு பாலம் அமைக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரசு கட்சி தெற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மருதாசலம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளர் நித்தியானந்தம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் சுப்பிரமணியம், மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதிதமிழர் பேரவை, பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள், அண்ணாநகர், பகவதிபாளையம், பெரியார்நகர் பகுதி மக்கள் பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கிருஷ்ணன் நன்றித் தெரிவித்தார்.

click me!