
மருமகளை, மாமியார் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருமகளை வெட்டிக் கொன்றது குறித்து தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் அகமது ராஜா. இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் கவிதாவை, கணவரின் தாயார் பாத்திமா அரிவாளால் வெட்டி கொலை செய்து தலைமறைவாகியுள்ளார். மாமியார், மருமகளை வெட்டி கொன்றது குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இறந்த கவிதாவுக்கும், அவரது கணவர் அகமது ராஜாவுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது என்று கூறப்படுகிறது. கவிதா தனது கணவரையும், அகமது ராஜா தனது மனைவியையும் விவாகரத்து செய்து விட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கவிதாவும், அகமது ராஜாவும் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இது அகமது ராஜாவின் தாயார் பாத்திமாவுக்கு பிடிக்கவில்லை.
இந்த நிலையில் கவிதா-அகமது ராஜாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததால் எங்கே தன்னுடைய சொத்தில் பங்கே கேட்பார்களோ என்ற அச்சத்தில் கவிதாவை கொன்று விட்டதாக கூறப்படுகிறது. கவிதாவை அரிவாளால் வெட்டிக் கொன்ற மாமியார் பாத்திமா தற்போது தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.