தேனியில் பதுங்கியுள்ளாரா பைனான்சியர் அன்புச்செழியன்! இன்று கைதாக வாய்ப்பு!

First Published Nov 26, 2017, 2:15 PM IST
Highlights
Theni - Cinema Financier Anbu Chezhiyan


நடிகர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமாக கருதப்படும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், தேனியில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளதாகவும், அவரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார், கந்து வட்டி கொடுமை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பைனான்சியர் அசோக்குமாரின் டார்ச்சர் குறித்து அசோக்குமார் கைப்பட கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான பைனான்சியர் அன்புசெழியனை தேடி வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான சசிகுமார், பைனான்சியர் அன்புச்செழியன் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், என்னுடைய அத்தை மகன் அசோக்குமார், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகரில் குடியிருந்து வருகிறார். என்னுடன் அசோக்குமார், இணை தயாரிப்பாளராக இருந்து வந்தார். தாரைத்தப்பட்டை பெரும் நஷ்டம். நாங்கள் தற்போது கொடிவீரன் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறோம். 30 ஆம் தேதி வெளியிடத் தயாராக இருந்தோம்.

எங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம் தாரைத்தப்பட்டை என்ற படத்தை வெளியிட்டோம். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதால் நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தோம். மேற்கண்ட சூழ்நிலையில் தற்போது கொடிவீரன் படத்தினை வெளியீடு செய்வதற்காக வேலை நடந்து கொண்டிருந்தது. நெருக்கடி. ஆனால், அன்புச்செழியன் அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தினை அசல் மற்றும் வட்டி, வட்டிக்கு வட்டி போட்டு ஒரு பெரும் தொகையினை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

இல்லையென்றால் கொடிவீரன் படத்தை வெளியிட விடமாட்டேன் என்று கடுமையாக நெருக்கடி கொடுத்து வந்தார். நான் எனது அடுத்த படவேலையில் இருந்ததால், இணை தயாரிப்பாளர் என்ற முறையில் அசோக்குமர் மேற்கண்ட கடன் பிரச்சனையைக் கையாண்டு வந்தார். குடும்பத்தைப் பற்றி கீழ்த்தரமாகவும், அநாகரிகமாகவும் பேசுவதாக கூறி அசோக்குமார் வருத்தப்பட்டு வந்தார். நான் வருத்தப்பட வேண்டாம் என்று கூறி வந்தேன்.

இந்த நிலையில் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அசோக்குமார் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொடிவீரன் படத்தை வெளியிட மாட்டேன் என்றும், எங்கள் வீட்டுப் பெண்களைத் தூக்கி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். கடந்த 7 வருடங்களாக வட்டிக்கு வட்டி என்று பணம் வாங்கி வந்தார் அன்புச்செழியன் என்று அசோக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, கந்து வட்டி கேட்டு மிரட்டியதோடு
அசோக்குமாரை தற்கொலைக்குத் தூண்டிய அன்புச்செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சசிகுமார் புகார் கூறியிருந்தார்.

அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் சசிகுமார் நேரில் ஆஜராகி துணை ஆணையர் அரவிந்தனின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அன்புசெழியன் மீது இன்னும் பல்வேறு புகார்கள் வரும் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தலைமறைவான சினிமா பைனான்சியர் அன்புசெழியனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். தேனியில் உள்ள மூத்த அமைச்சரின் ஒருவர் வீட்டில் அன்புச்செழியன் தங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, போலீசார் தேனி விரைந்து சென்றுள்ளனர் என்றும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தனிப்படை போலீசார் கூறியதாக தகவல் வெளியாகி
உள்ளது.

click me!