தீபாவளிக்கு முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் முதுமலை வனவிலங்கு காப்பகம் அமைந்துள்ளது. 1940 இல் தொடங்கப்பட்ட இந்த காப்பகம் தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகம் ஆகும்.
பண்டிகை நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் இந்த வனக்காப்பகத்தில் உள்ள விலங்குகளை காண ஏராளமான பொதுமக்கள் குவிந்த வண்ணம் வருகை தருவார்கள்.
அதன்படி வரும் தீபாவளி விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் அதிக பேர் வருவதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காப்பக நிறுவனம் எடுத்து வருகின்றனர்.
விலங்குகளை காண இளைஞர்களும், சிறுவர்களும் அதிகம் வர உள்ளதால் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் விலங்குகள் பயப்படும் அபாயம் இருப்பதால் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதாவது, அக்.17,18-ம் தேதிகளில் முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முதுமலை கள இயக்குநர் சீனிவாச ரெட்டி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.