30% ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 20% ஆக குறைந்துள்ளது... ராதாகிருஷ்ணன் சொல்லும் சூப்பர் தகவல்!!

By Narendran SFirst Published Jan 23, 2022, 9:51 PM IST
Highlights

கடந்த 15 ஆம் தேதி 30 சதவீதமாக ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 20 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கடந்த 15 ஆம் தேதி 30 சதவீதமாக ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 20 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெல்டா, ஒமைக்ரான் பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் ஏற்றம் குறைந்துள்ளது.

கடந்த 15 ஆம் தேதி 30 சதவீதம் ஆக இருந்த பாதிப்பு தற்போது 20 சதவீதமாக குறைந்துள்ளது. 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆக்சிஜன் சிகிச்சை பெறுவோர் மற்றும் உயிரிழப்பு குறைவாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது. எனினும் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். பூஸ்டர் டோஸுக்கு தகுதியானவர்கள் உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் கொரோனா வரும். பல்வேறு இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் கொரோனா தொற்று குறைவது ஆறுதலாக இருக்கிறது. கொரோனா தொற்றால் இறந்தவர்கள் தடுப்பூசி போட்டுகொள்ளாதவர்கள், வயது முதிர்ந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள் தான். அதனால் தான் 95 சதவீதம் இறப்பு விகிதம் உள்ளது. கொரோனா தொற்று நிலையை பொறுத்து வரும் வாரங்களில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்குமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். மேலும், கொரோனா தொற்று குறைந்தால் வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்காது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

click me!