தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் கூட்டுறவுத்துறை ஆய்வு கூட்டம் குறித்து தமிழக அரசு ஆய்வறிக்கை வெளியிட்டது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் கூட்டுறவு வங்கிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பால் 4,474 கூட்டுறவு கடன் சங்கங்களால் விதை, உரம் வழங்கமுடியவில்லை. பயிர்க்கடன் இலக்கு, உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா பருவம் தொடங்கிய நிலையில் புதிய பயிர்க்கடன் வழங்கமுடியவில்லை, உரிய தேதிக்குள் பயிர்க்கடன் செலுத்தும் விவசாயிக்கு 7 சதவீதம் வட்டி மானியம் தர சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கிராம அளவில் உள்ள 4,344 பொது சேவை மைங்கள் முடங்கியுள்ளன. பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் வாடிக்கையாளர்களை இழக்கும் சூழல் உள்ளது என்றும், விவசாயிகள் பயிர்க்கடன் தொகையை உரிய காலத்தில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.