எழுத்தாளர்கள் கருத்துகளை மிகைப்படுத்துவதால்தான் பிரச்சனைகள், வன்முறைகள் வருகிறது – காந்தி பேரன் அறிவுரை…

First Published Sep 16, 2017, 8:16 AM IST
Highlights
Controversies and violence comes from the writers exaggerations - Gandhi grandson advise


நீலகிரி

எழுத்தாளர்கள் எந்த ஒரு கருத்தையும் மிகைப்படுத்தி எழுதாமல் இருந்தால், பிரச்சனைகள் மற்றும் வன்முறைகள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று ஊட்டியில் நடந்த இலக்கிய விழாவில் மகாத்மா காந்தி பேரன் கோபாலகிருஷ்ண காந்தி கூறினார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சர்வதேச அளவிலான தகவல்களைக் கொண்ட பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இருந்து எழுத்தாளர்கள், கட்டுரை ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆய்வுகளையும், கட்டுரைகளையும் சரிபார்க்க இங்கு வருகின்றனர். இதனால்,   இது முக்கியத்துவம் வாய்ந்த நூலகமாக திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் இந்நூலகத்தில, நூலக குழு சார்பில் இலக்கிய விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் மகாத்மா காந்தியின் பேரனும், சர்வதேச எழுத்தாளருமான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்ருப் பேசினார்.

அப்போது அவர், “உலக அளவில் போற்றி, பாராட்டப்படும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரன் என்பதால், நான் செல்லக்கூடிய இடங்கள், எழுத்தாளர்கள், கட்டுரை ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இடையே மரியாதையும், கௌரவமும் எனக்கு கிடைக்கிறது.

இதற்கு காரணம் எனது தாத்தா மகாத்மா காந்தி சட்டக் கல்வி படித்திருந்தாலும் நாட்டுக்காக தன்னை எளிமைப்படுத்தி அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி இந்தியாவிற்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றுத்க் தந்ததே.

இன்றைய தலைமுறையினர் மத்தியில் காந்தியின் சிந்தனைகள் வளர்ந்தாலும், அதிகமான அளவில் கொண்டு வர வேண்டியது முக்கியமாகிறது.

தற்போதைய சூழ்நிலையில் அதிகார வர்க்க எழுத்தாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலைவுள்ளது. இந்த நிலை மாற நாட்டுப்புற வாழ்க்கை குறித்த கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்.

இந்தக் கதைகள் வெளிவரும் போது, இதனை படிக்கும் மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக வேண்டும். புத்தகங்களில் உள்ள வி‌ஷயங்களை அப்படியே உள்வாங்க கூடாது. அதில் எதிர்மறை இருக்கலாம். எனவே, புத்தகங்களில் உள்ள சம்பவங்களை புரிந்து உள்வாங்கி கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்கா நாட்டில் இரயிலில் செல்லும்போது, தன்னை வெளியேற்றியது குறித்த விவரத்தை தனது சுயசரிதையில் மூன்று வரிகளில் மட்டுமே எழுதியுள்ளார்.

இதை நாம் படித்து புரிந்துகொண்டு, மிகைப்படுத்தி உள்ளோம். அதேபோன்று தேசிய பாடல்களில் மதத்தை குறிப்பிட்ட வரிகள் அகற்றி பின்புதான், இந்த பாடல்கள் வழக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.

எழுத்தாளர்கள் எந்த ஒரு கருத்தையும் மிகைப்படுத்தி எழுதாமல் இருந்தால், பிரச்சனைகள் மற்றும் வன்முறைகள் ஏற்படுவதை தடுக்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் நூலக புரவலரும், எழுத்தாளருமான கீதா சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

click me!