
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு கணிசமான சீட்டுகளை திமுக குறைக்கலாம் என பேச்சு அடிபடுகிறது. ஏற்கெனவே காங்கிரஸ், தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், பீகார் முடிவுக்கு பிறகு இந்த கூட்டணி முடிவானதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பீகார் மாநிலத்தைப் போல தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சிலர் ஆருடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். பீகார் மாநில தேர்தலை பொறுத்தவரை அங்கு வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தில் காரணமாக 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
கடந்த 2005 முதல் 20 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருக்கிற நிதிஷ்குமார் மீண்டும் வெற்றி பெறுவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் பா.ஜ.க. கூட்டணியின் வெற்றி எப்படி சாத்தியமாயிற்று என்று அரசியல் வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் இருந்து 2023 இல் இந்திய தலைமை நீதிபதியை நீக்கி விட்டு பிரதமர். மத்திய அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் என்று மாற்றியமைத்தார்களோ அன்றைக்கே இந்திய தேர்தல் ஆணையம் மோடி-அமித்ஷாவின் கூட்டணிக்குள் ஐக்கியமாகி விட்டது.
தமிழ்நாட்டில் கூட்டணி
கடந்த காலங்களில் வாக்குத் திருட்டு மூலமாக மகாராஷ்டிரா, அரியானா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. அத்தகைய உத்தியை தான் பீகாரிலும் பின்பற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள். மக்கள் வாக்களித்து பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறவில்லை.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் காங்கிரல் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல் ஆகியவற்றில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
வெற்றிக் கூட்டணி
தமிழகத்தை பொறுத்தவரை மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளுக்காகவும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற நோக்கத்திலும் இந்தியா கூட்டணி வெற்றிக் கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. மத்திய பாஜ.க அரசின் தமிழக விரோத போக்கிற்கு எதிராக மக்கள் ஓரணியில் திரண்டு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக அணிவகுத்து நிற்கிறார்கள்.
இந்தியா கூட்டணி வெற்றி பெறும்
எக்கு கோட்டை போல இருக்கிற இந்தியா கூட்டணிக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி பங்கு போட்டுக் கொள்கிற சூழல் தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் இருக்கப் போகிறது. இதன் அடிப்படையில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.