உயர்ந்தது வணிக சிலிண்டர் விலை… ரூ.101 உயர்ந்து ரூ.2,234-க்கு விற்பனை… நெருக்கடியில் வியாபாரிகள்!!

By Narendran SFirst Published Dec 1, 2021, 3:17 PM IST
Highlights

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்து ரூ.2,234.50க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வியாபாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்து ரூ.2,234.50க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வியாபாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டு 660 ஆக நிர்ணயிக்கப்பட்டது.  பின்னர் ஜனவரி மாதத்தில் சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. மாதம் மாதம் விலை அதிகரித்து, அக்டோபர் மாதத்தில் காஸ் சிலிண்டர் விலை ரூ. 915.50 ஆக நீடித்தது. தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

அதில், நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த மாத விலையிலேயே தொடருவதாக அறிவித்துள்ளது. எனினும், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்து ரூ.2,234.50க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி ரூ.1865 ஆக இருந்த சிலிண்டர் விலை இரண்டு மாதங்களில் 369 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில் வணிகப் பயன்பாடு கொண்ட சிலிண்டர்கள் விலை உயர்வு காரணமாக வியாபாரிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா காரணமாக ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் வீழ்ச்சியைச் சந்தித்து உள்ள நிலையில், ஓராண்டில் மட்டும் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால் செலவீனம் அதிகரிப்பதாக வியாபாரிகள் கூறியிருந்தனர். ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாயை கடந்து உள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் வரவு சற்று குறைந்துள்ளதாக கூறியுள்ள நிலையில் தற்போது டிசம்பர் மாதத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே ஆண்டில் 770 ரூபாய் உயர்ந்துள்ளதும், முன்னதாக அக்டோபர் 6 ஆம் தேதி 1865 ரூபாய்க்கு விற்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியம் இல்லாத சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை எனவும், கடந்த மாதம் வெளியே தொடர்வதாக எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தொடர்ந்து, வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

click me!