11ம் வகுப்பு மாணவி தற்கொலை… கல்லூரி மாணவர் போக்சோவில் கைது… மாங்காட்டில் பரபரப்பு!!

By Narendran SFirst Published Dec 20, 2021, 11:45 AM IST
Highlights

சென்னை மாங்காட்டில் 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாங்காட்டில் 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் இந்த சம்பவத்தை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கோவை மாணவி தற்கொலை, கரூர் மாணவி தற்கொலை என பள்ளிகளில் மாணவிகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளால் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். தொடர்ந்து பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசும் படிக்கும் இடத்தில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானால் அது குறித்து தைரியமாக புகார் அளிக்க அவசர உதவி எண்ணையும் அறிவித்துள்ளது. இருந்த போதிலும் மாணவிகள் தற்கொலை செய்துக்கொள்வது, பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவர் ஒரு உருக்கமான கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். அதில், பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். மேலும், மாணவி, #SchoolisNotSafety என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட மாணவி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் அவரது தந்தை வேலைக்கு சென்று விட்டார். அவரது தாய் மற்றும் மகள் மட்டும் வீட்டில் இருந்தனர். தாய் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அறைக்குள் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. கதவை தட்டியும் திறக்காததால் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கடந்த சில தினங்களாக மாணவி தனக்கு நெருக்கமான தோழிகளிடம் பேசாமல் புதிய தோழிகளிடம் பேசியதாகவும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன, காரணமானவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மாணவி தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக கல்லூரி மாணவர் விக்னேஷ் இன்று போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.   

click me!