இராமநாதபுரம்
கடல் அரிப்பைத் தடுக்க இராமேசுவரம் முதல் தனுஷ்கோடி வரை பத்தாயிரம் பனை விதைகள் நட வேண்டும் என்று இராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், இராமகிருஷ்ணபுரம் முதல் தனுஷ்கோடி வரை கடல் அரிப்பைத் தடுக்க பத்தாயிரம் பனை விதைகள் நடுவதற்கு மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இராமேசுவரம் நகராட்சி மூலம் நேற்று முதல் தனுஷ்கோடி வரை பனை விதைகள் நடும் பணி தொடங்கியது.
இராமகிருஷ்ணபுரம் பகுதியில் பனை விதை நடும் பணியை நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் தொடங்கி வைத்தார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் தலைமையில் 25–க்கும் மேற்பட்ட நகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் கூறியது:
"கடல் அரிப்பைத் தடுப்பத்தில் பனை மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இராமேசுவரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரை பசுமையாக்கவும், கடல் அரிப்பைத் தடுக்கவும், சுற்றுலாப் பயணிகளிடம் பனை மரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாவட்ட ஆட்சியர் நடராஜன் பனை விதைகளை நட உத்தரவிட்டு உள்ளார்.
இராமேசுவரம், இராமகிருஷ்ணபுரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரை 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு பத்தாயிரம் பனை விதைகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.
எம்.ஆர்.சத்திரம் கடற்கரை வரை மூன்றாயிரம் பனை விதைகள் நடப்பட்டுள்ளன. இன்னும் மூன்று நாட்களுக்குள் அரிச்சல்முனை கடற்கரை வரை பனை விதைகள் நடப்படும்" என்று அவர் தெரிவித்தார்.