'உன்னை யாரும் சும்மா விடமாட்டாங்க' ; கோர்ட்டுக்கு வந்த மிதுனை மிரட்டிய மக்கள் - கோவை மாணவி தற்கொலை விவகாரம்

By Raghupati RFirst Published Nov 26, 2021, 7:04 AM IST
Highlights

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திக்கு,  2 நாட்கள் போலீஸ் காவல் விதித்து ‘கோவை’ போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் மாணவி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத குற்றத்திற்காக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியால் வேறு எந்த மாணவியும் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பது பற்றி விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக 5 நாள் காவல் கேட்டு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து, கோவை  மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக கைதான ஆசிரியர் சக்கரவர்த்தி நேற்று  கோவை போலீசாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போக்சோ கோர்ட்டுக்கு அழைத்து சென்றபோது, கோர்ட்டு வளாகத்தில் நிறைய பொதுமக்கள் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

அப்போது, ‘உனக்கு தண்டனை கிடைப்பது உறுதி, உன்னை யாரும் சும்மா விட மாட்டாங்க’ என கோஷமிட்ட அவர்களை, போலீசார் விரைந்து வந்து அப்புறப்படுத்தினர். இந்த மனு மீதான விசாரணை தொடங்கியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், மிதுன் சக்கரவர்த்தியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அவரை வேனில் ஏற்றி சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக இந்த வழக்கில் கைதான பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தனக்கு ஜாமீன் வழங்ககோரி, கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மீரா ஜாக்சன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

click me!