
Tamil Nadu fishermen arrest : தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறை பிடிக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், நேற்று (06.08.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்திள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் 06.08.2025 அன்று அதிகாலை 14 இந்திய மீனவர்கள், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் ஒரு பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டதை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் தனி கவனத்திற்குக் கொண்டு வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று தான் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 2025 ஆம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில், இது 17-வது சம்பவம் என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
தற்போது, 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருப்பதாகவும், மீனவர்கள், அவர்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளதை தனது கடிதத்தில் வேதனையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்திடுமாறு ய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்