மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு நீரை வெளியேற்றி, வெள்ளநீர் வடிந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
சென்னையில் வெள்ள பாதிப்பு
மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னையின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதிகளில் மழை நீர் வடியவைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. மேலும் நிவராணப்பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தரமணி, பாரதிநகர் மற்றும் துரைப்பாக்கம், கல்குட்டை பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
மேலும், நேப்பியார் பாலம் அருகில், கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் மழைநீர் சீராக வடிகிறதா என்பதையும் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு. உடை. போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். பின்னர் ஓட்டேரி நல்லான் கால்வாயில் நீர்வரத்தினை பார்வையிட்டார்.
மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி, இன்று அனகாபுத்தூர் பகுதியில் மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கினேன்.
அரசின் மீட்புப் பணிகளுக்குத் துணைநின்று தன்னார்வலர்கள் பலரும் உதவி வருகிறார்கள். pic.twitter.com/yLwu7reIfq
நிவாரண உதவி வழங்கிய முதலமைச்சர்
தொடர்ந்து, குக்ஸ் சாலை பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் முதலமைச்சர் வழங்கினார். மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை படகுகளில் அனுப்பி வைத்தார். பின்னர், அகரம் ஆனந்தன் பூங்கா, பாலாஜி நகர் பிரதான சாலை மற்றும் செல்வி நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அம்மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார்.
உடனடியாக மின்சாரம் வழங்க உத்தரவு
கொளத்தூர் பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு நீரை வெளியேற்றி, வெள்ளநீர் வடிந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்கிட வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்