தமிழகத்திலும் வெடித்தது ஹிஜாப் சர்ச்சை.. கல்லூரி மாணவர்கள்.. இஸ்லாமிய அமைப்புகள் ‘போராட்டம் !’

By Raghupati RFirst Published Mar 16, 2022, 11:56 AM IST
Highlights

கர்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று  கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டித்து புதுக் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

ஹிஜாப் சர்ச்சை :

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.  ஆனால், அந்தக் கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது.

 அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியது.

இதையடுத்து பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து வரவேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டது. பள்ளி, கல்லூரிக்கு கர்நாடக அரசு விதித்துள்ள ஆடை கட்டுப்பாட்டு மற்றும் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. 

நீதிமன்றம் உத்தரவு :

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகளான ரேஷ்மா பாரூக், காஜிரா மற்றும் அவரது தாய் உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி கிருஷ்ண தீக்சித் முன்னிலையில் நடந்தது. அப்போது, ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை கர்நாடக ஐகோர்ட்டின் விரிவான அமர்வு விசாரிக்கும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், காஸி ஜெய்புனிஷா முகைதின் (பெண் நீதிபதி) முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை விதித்து உத்தரவிட்டனர். ஹிஜாப் விவகாரம் குறித்த பல்வேறு மனுக்களை கர்நாடக ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஹிஜாப் இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை. அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே. எனவே ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும்  என கர்நாடக ஐகோர்ட் அதிரடியாக தீர்ப்பு அளித்தது.

தமிழகத்தில் போராட்டம் :

கர்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டித்து புதுக் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். நேற்று மாலை நாகூர் தர்கா முன்பாக இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது.  இதில், ஊர் மக்கள் பலர் கலந்துகொண்டு ஹிஜாப் தடை தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஹிஜாப் தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அந்த அமைப்பு அறிவித்து உள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மேலும் போராட்டங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!