22 ஆண்டுகளாக தனது வழக்கில் தீர்ப்பு கிடைக்காததல், ஐகோர்ட் எதிரே முதியவர் தீக்குளிக்க முயன்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
22 ஆண்டுகளாக தனது வழக்கில் தீர்ப்பு கிடைக்காததல், ஐகோர்ட் எதிரே முதியவர் தீக்குளிக்க முயன்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் ஆட்டயம்பட்டியை சேர்ந்தவர் பச்சையப்பன். விவசாயி. இவருக்கும், இவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த 1996ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், இத்தனை ஆண்டுகளும் வாய்தா மேல் வாய்தா கொடுக்கப்பட்டதால், பச்சையப்பன் கடும் விரக்தியடைந்தார். மேலும், ஒவ்வொரு முறை சென்னை வருவதற்கான செலவுக்கு கடன் பெற்றதாக தெரிகிறது. இந்நிலையில், பச்சையப்பனின் சொத்து தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் வாய்தா வழங்கப்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சல் அடைந்த அவர், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது, உயர்நீதிமன்ற நுழைவாயில் அருவே வந்த அவர், மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அந்த நேரத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் மீது தண்ணிர் ஊற்றி, குளிப்பாட்டினர். பின்னர் போலீசார், பச்சையப்பனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், கடந்த 22 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. ஆனால், இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. தீர்ப்பும் வழங்கவில்லை என கூறி அழுது புலம்பினார்.