
குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தையின் 21 வயது வரையிலான படிப்புச் செலவை, தமிழக அரசு ஏற்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் தனம்.இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் இவருக்கு ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், தனம் மீண்டும் கர்ப்பமாகி கடந்த 2017-ம் ஆண்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அதையடுத்து, தனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் தனம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ மனுதாரருக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவருக்கு அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. எனவே, அக்குழந்தைக்கு 21 வயது ஆகும்வரை அக்குழந்தையின் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும். இதற்காக மாதம் ரூ. 10 ஆயிரம் எனக் கணக்கிட்டு மனுதாரருக்கு ஆண்டுக்கு ரூ. 1.20 லட்சம் வழங்க வேண்டும். இந்த 3-வது பெண் குழந்தையையும் அரசின் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் சேர்த்து நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளார்.