
இதுக்குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர் சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும் அழகுடன் பாராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் பெருநகர் சென்னை மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் தெருக்களின் விவரங்கள் குறித்த பலகைகளில், பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இந்த போஸ்டர்கள், சென்னை மாநகராட்சியின் பணியாளர்களால் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. இதுபோன்று பெயர் பலகையின் மீது சுவரொட்டி மற்றும் விளம்பரங்கள் செய்யும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடகழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. தூய்மை பணியாளர்களால் வீடுகள் தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன.மேலும் பொது இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு, திடக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.
சென்னயை குப்பை இல்லாத நகரமாகவும் தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநகராட்சியின் ஒரு சில பகுதிகளில் பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளும், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் இருந்து கட்டிட கழிவுகளும் சாலைகளின் ஓரங்களில் கொட்டப்படுகின்றன. இவ்வாறு குப்பைகளை சாலை ஓரங்களில் ஓட்டுவதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகளும் கட்டுமான கழிவுகளால் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.
திட கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 ந் படி, பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி ஏறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்கள் மீது ரூ500/ மற்றும் கட்டுமான கழிவுகளை அங்கீகரிக்காத இடங்களிலும் சாலைகளிலும் கொட்டுபவர்கள் மீது ஒரு டன் வரை ரூ.2000/- மற்றும் ஒரு டன்னிற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 01.01.2022 முதல் 18.03.2022 வரை விதிகளை மீறி பொதுஇடங்களில் குப்பை கொட்டிய நபர்களிடமிருந்து 12 லட்சத்துக்கு 53,000 ரூபாய் அபராதமும், அங்கரிக்கப்படாத பொதுஇடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களிடமிருந்து 12 லட்சத்து 10 ஆயிரத்து 480 ரூபாய் அபராதமும் என மொத்தம் ரூ. 24,63,780 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து தூய்மையாக பராமரிக்க, முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.மீறும் நபர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன் படி , அபராதம் விதிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.