ஆன்லைன் டிக்கெட் புக்கிங்குகளை அபிராமி திரையரங்கம் ரத்து செய்துள்ளதற்கு நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் வரவேற்பு அளித்துள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி திரையங்கில் திரையிடப்படும் படங்களை காண ஆன்லைன் புக்கிங் செயல்பட்டு வந்தது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரி மற்றும் மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரிகளை கண்டித்து திரையரங்கு உரிமையாளர்கள் 4நாட்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டது.
இதையடுத்து அனைத்து திரையரங்குகளும் செயல்பட்டு வந்தன. திரையரங்குகளில் நேரில் சென்று கவுண்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளின் விலையை விட ஆன்லைனில் புக்கிங் செய்யப்படுவது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தனக்கு சொந்தமான அபிராமி திரையரங்கில் ஆன்லைன் டிக்கெட் விற்பணையை ரத்து செய்துள்ளார்.
இதற்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் வரவேற்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் டிக்கெட் விற்பனையால் திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் இடமில்லாமல் திரும்ப செல்லும் நிலை ஏற்படுவதை தவிர்க்கலாம் என்ற நோக்கில் முதற்கட்டமான இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.