
தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் மூன்று மாத வாடைகையை மட்டுமே அட்வான்சாக கொடுக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த வீட்டுவசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் இடையே போடப்படும் ஒப்பந்தத்தின்படி வீட்டு வாடகை நிர்ணயம் செய்யப்படும் என தெரிவித்தார். வாடகை ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட்டு, பதிவு எண் வழங்கப்படும் என்றும் . முறையாக பதிவு செய்யாமல், வீடுகளை வாடகைக்கு விட முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
புதிய வாடகை நிர்ணய சட்ட மசோதாவால் குடியிருப்பவர்கள், உரிமையாளர்கள் இருவருக்குமே சட்ட பாதுகாப்பு. பிரச்சனைகளை விசாரித்து 30 நாட்களுக்குள் அதிகாரிகள் தீர்வு காண்பர் என்று அவர் கூறினார்.
3 மாத வாடகையை மட்டுமே, முன்பணமாக உரிமையாளர்கள் பெறவேண்டும். வீடுகளை பழுது பார்க்கும் பணிகள் குறித்து வரையரை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சின்ன சின்ன பராமரிப்பு பணிகளை வாடகைதாரர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளையடித்தல் உள்ளிட்ட பெரிய அளவிலான மராமத்துப் பணிகளை வீட்டு உரிமையாளர் செய்து கொடுக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் வாடகைதாரரை குறிப்பிட்ட காலக்கெடு கொடுத்துதான் காலி செய்ய சொல்ல வேண்டும்.
அந்த காலக்கெடுவுக்குள் வாடகைதாரர் காலி செய்து கொடுக்க வேண்டும். வீட்டை உள்வாடகைக்கு விடுதல் கூடாது. போன்ற சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.