
தமிழக அரசின் பட்ஜெட் லோகாவில் இந்திய அரசின் ரூபாய் சின்னத்திற்குப் பதில் ரூ என்ற எழுத்தைப் பயன்படுத்தி இருப்பதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். ரூபாய் சின்னத்தை மாற்றுவது முட்டாள்தனம் என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஆளும் திமுக மட்டுமின்றி, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
இந்நிலையில் நாளை தமிழக சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் லோகோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்டார். அதில், ரூபாய் குறியீட்டுக்குப் (₹) பதிலாக ‘ரூ’ என்ற தமிழ் எழுத்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது புதிதாக சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதனைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழக அரசு ரூபாய் குறீயீட்டை மாற்ற முயற்சி செய்வதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது பதிவில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:
“2025-26 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் மாநில பட்ஜெட்டில் ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசின் ரூபாய் சின்னம் மாற்றப்பட்டுள்ளது. இது முழு இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தின் குறியீடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார், முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வின் மகன் ஆவார். இந்திய அரசின் சின்னத்தை மாற்றுவது முட்டாள்தனம்” என்று முதல்வர் ஸ்டாலினை அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.