
பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான 46.7 கி.மீ. தொலைவை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நெடுஞ்சாலை மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய பகுதிகளை இணைக்கும். இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை 87 மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.
தற்போது, இப்பகுதிகளுக்கான போக்குவரத்து 2 வழிச் சாலைகளை மட்டுமே நம்பியுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலான நேரங்களில் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனை எதிர்கொள்ளும் விதமாக, என்.எச்.-87 தேசிய நெடுஞ்சாலைக்குட்பட்ட பிரிவில் பரமக்குடி - ராமநாதபுரம் நான்கு வழிச் சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் விவரித்தார். இதன்படி, ரூ.1,853 கோடி மதிப்பில் இந்த திட்டம், "ஹைபிரிட் ஆனுவிட்டி மோட்" எனப்படும் அரசு மற்றும் தனியார் நிதியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், பரமக்குடி, சத்திரக்குடி, அச்சுந்தன்வயல் மற்றும் ராமநாதபுரம் போன்ற விரைவாக வளர்ந்து வரும் நகரங்களுக்கான போக்குவரத்து தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அத்துடன், இந்த வழியில் போக்குவரத்து நெரிசல் குறையும், சாலைப் பாதுகாப்பு மேம்படும்.
திட்டம் முழுமையாக நிறைவடைந்ததும், இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கியப் பங்காற்றும். பெரிய அளவிலான மத மற்றும் பொருளாதார மையங்களுக்கான இணைப்பு வலுப்படும். மேலும், சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டிற்காக புதிய அகன்ற சாலைகளைத் திறப்பது ஆகியவற்றிற்கும் இந்தத் திட்டம் வழிவகுக்கும்.
இதனால், நேரடியாக 8.4 லட்சம் பேருக்கும், மறைமுக அடிப்படையில் 10.45 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும். மேலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வளம் ஆகியவற்றிற்கான புதிய வாய்ப்புகளும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.