
மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 30 ஆம் தேதி மதுரையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா வெகு பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
இதில் மதுரை மற்றும் திண்டுக்கல்லில் அனுமதியின்றி ஏராளமான விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இதனால், அனுமதியில்லாமல் பேனர்களை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டிராஃபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு ஜூலை 24 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.