
கன்னியாகுமரியில் முழுவதும் பெய்த பரவலான மழையால் மரம் சாய்ந்து விழுந்து கார் நசுங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை கடந்த சில நாள்களாக பெய்து வருகிறது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதன்படி நேற்று முன்தினம் பெய்த மழை அதிகபட்சமாக அடையாமடை பகுதியில் 52 மி.மீ. பதிவாகியிருந்தது.
நாகர்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று வீசியது. இதில் வடசேரி ரவிவர்மன் புதுத்தெருவில் நின்ற ஒரு வேப்பமரம் சாலையில் சாய்ந்தது. காற்றில் சாய்ந்த அந்த மரம் அங்கு நிறுத்தியிருந்த ராஜேந்திரன் என்பவரது கார் மீது விழுந்தது. இதில் அந்த கார் நசுங்கி சேதமடைந்தது.
இதுபோல கன்னியாகுமரியில் இடி–மின்னலுடன் பெய்த பலத்த மழையால் சங்கிலித்துறை கடற்கரைக்கு செல்லும் பாதையில் காந்தி மண்டபம் அருகே இருந்த தடுப்பு சுவர் இடிந்து கடலுக்குள் விழுந்தது.
தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் அதன் அருகே உள்ள மின்கம்பம் ஆபத்தான நிலையில் நிற்கிறது. எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மார்த்தாண்டம் பகுதியில் நேற்று பகல் முழுவதும் இடை இடையே சாரல் மழையும், பலத்த மழையும் பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது