திண்டுக்கல்
திண்டுக்கல்லில் சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், வில்பட்டி ஊராட்சிப் பகுதியான குறிஞ்சிநகர்ப் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்தச் சாலையை 100-நாள் வேலைத் திட்டத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், குறிஞ்சிநகர்ப் பகுதிலுள்ள ஒருசிலர் சாலையை அமைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிப்போருக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களிடம் வட்டார வளர்ச்சி ஆணையர் பட்டுராஜன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி குறிஞ்சி நகர்ப் பகுதியில் வியாழக்கிழமை (அதாவது இன்று) முதல் 100 நாள் வேலை திட்டம் மூலம் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று கூறினர்.
இதனை ஏற்றுக் கொண்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.