
திண்டுக்கல் மாவட்டத்தில் தடையை மீறி நடந்த சல்லிக்கட்டு நடக்கிறது என்ற தகவலை கேட்டு தடுப்பதற்காக காவல்துறை வருவதற்குள் சல்லிக்கட்டு நடந்து முடிந்தது. தடுக்க வந்த காவல்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பெரியகலையம்புத்தூரில் உயர்நீதிமன்ற பத்ரகாளியம்மன் கோவில், நடுத்தெரு, கிழக்குத்தெரு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி பல ஆண்டுகளாக சல்லிக்கட்டு நடைபெற்று வருவது வழக்கம்.
சல்லிக்கட்டுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக சல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. ஆனால், காளை வளர்ப்பவர்கள், மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் இந்த வருடம் சல்லிக்கட்டுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. மத்திய, மாநிலை அரசுகளும் இந்தாண்டு சல்லிக்கட்டு நடத்துவதில் இருந்து பின்வாங்க மாட்டோம், தமிழர்களின் உணர்வை மதித்து சல்லிக்கட்டு நடத்த சட்டப்படி அணுகுவோம் என்று ஆசைகாட்டினர்.
அதனை நம்பி மக்களும் காத்திருந்தனர். ஆனால், எப்போது, பீட்டாவின் தலையீடு தலைத் தூக்கியதோ அப்போதே மக்கள் சுதாரித்துக் கொண்டு இது தமிழர்களின் பிரச்சனை என்றும், தாங்களே இதற்கு தீர்வு கண்டு கொள்கிறோம் என்றும் உத்வேகத்துடன் உச்சநீதிமன்றத்தின் தடையை தகர்க்க ஆரம்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை உடைத்து சல்லிக்கட்டு நடத்தி பொங்கல் திருவிழாவை தமிழர்கள் வீரத்துடன் கொண்டாடினர்.
இந்த நிலையில், பெரியகலையம்புத்தூரில் சல்லிக்கட்டு நடைப்பெற்றது. இதில் பெருமாள்புதூர், கரிக்காரன்புதூர், காவலப்பட்டி, ஒட்டனைப்புதூர், வேலாயுதம்பாளையம்புதூர், கரடிக்கூட்டம், அய்யம்பாளையம், நெய்க்காரபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்பட்ட 10–க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சுமார் 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் அங்கு வந்தனர்.
இரகசியமாக அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதில் இருந்து வெளியேறிய காளைகள் சீறி பாய்ந்தன. அந்த காளைகளின் திமிலை பிடித்து, மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள், மாடு பிடி வீரர்களை தூக்கி அடித்தது.
இதுபற்றி தகவல் அறிந்த பழனி தாலுகா காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே சல்லிக்கட்டை முடித்துவிட்டு பொதுமக்கள் கலைந்துச் சென்றனர். இதனால் காவலாளர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.