
தருமபுரி
தருமபுரியில் வீட்டில் இருந்த ரூ.62 இலட்சம் மற்றும் 20 சவரன் நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடிய தொழிலதிபரை காவலாளர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ளது ராமியம்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (58). இவருடைய மகன்கள் விமல் (30), பிரபாகரன் (28). தொழிலதிபர்கள்.
விஜயகுமாருக்கு ஆந்திர மாநிலம் சித்தூரில் கிரானைட் குவாரி ஒன்று உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தாதனூரில் கிரானைட் அறுக்கும் ஆலையும் உள்ளது.
கடந்த 9-ஆம் தேதி விஜயகுமார் குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பினார். அப்போது, வீட்டில் வைத்திருந்த ரூ.62 இலட்சம், 20 சவரன் நகைகள் திருட்டு போனதாக பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் பிரபாகரன் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் பணம், நகைகள் திருடியதற்கு எந்தவொரு தடயமும் இல்லை. அதனால் பிரபாகரன், விமல், விஜயகுமாரிடம் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணையில் பிரபாகரன், "தங்கள் வீட்டில் திருட்டு நடக்கவில்லை" என்றும், "தொழிலில் நட்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க இவ்வாறு புகார் அளித்தோம்" என்று ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து பிரபாகரனை காவலாளர்கள் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம், நகை கொள்ளை நடந்ததாக நாடகமாடி காவலாளர்களை ஏமாற்றிய கிரானைட் அதிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது.