பள்ளி மாணவனை மிரட்டி ஓரினச் சேர்க்கை; வெளியே சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் கொலை செய்த பஸ் கண்டக்டர்...

First Published Aug 9, 2018, 7:09 AM IST
Highlights

கரூரில் பள்ளி மாணவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்திவிட்டு வெளியே சொன்னால் சிக்கிவிடுவோமோ என்று பயந்த பேருந்து நடத்துநர் மாணவனை கொடூரமாக கொலை செய்துள்ளார். 

கரூர் மாவட்டம், க.பரமத்தி, விஸ்வநாதபுரியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் சிரஞ்சீவி (13). இதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். 

நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற சிரஞ்சீவி மாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர்கள், சிரஞ்சீவியின் நண்பர்கள், பள்ளிக்கூடம், வழக்கமாக விளையாடும் இடம் என பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும், சிரஞ்சீவி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர் நகர் வாய்க்கால் பகுதியில் உள்ள சீத்தைக்காட்டில் சிறுவன் ஒருவன் இறந்து கிடக்கிறான் என்ற தகவலை பொதுமக்கள், க.பரமத்தி காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலாளர்கள் விசாரித்து, பின்னர், சிரஞ்சீவியின் பெற்றோரை வரவழைத்து தங்கள் மகன் தானா? என்று அடையாளம் காணும்படி கூறினர். அது சிரஞ்சீவி தான் என்று அவரது பெற்றோர்கள் உறுதி செய்தனர். மகனின் உடலைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதனைக் கண்ட பொதுமக்களும் வேதனை அடைந்தனர்.

பின்னர், சிரஞ்சீவியின் உடலைக் கைப்பற்றி காவலாளர்கள் உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவலாளர்கள் விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையில், "நேற்று முன்தினம் மாணவன் சிரஞ்சீவியை தனியார் மினி பேருந்து நடத்துநர் பிரதீப் (19) என்பவர் அழைத்துச் சென்றார்" என்ற தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து பிரதீப்பை பிடித்து காவலாளர்கள் விசாரித்ததில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. அதில், "பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றுக் கொண்டிருந்த சிரஞ்சீவியை சாதாரணமாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார் பிரதீப். 

அங்கு சிரஞ்சீவை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியுள்ளார். இதில் சுருண்டு விழுந்த சிறுவன் கதறி அழுதான். பின்னர், இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறுவேன் என்று பிரதீப்பிடம் கூறியுள்ளார்.  எங்கு தான் சிக்கிவிடுவோமோ? என்று பயந்த பிரதீப், தனது சட்டையால் சிரஞ்சீவியின் வாய் மற்றும் மூக்கை அழுத்திப் பிடித்து மூச்சுத் திணற செய்துள்ளார்.

சிறுவன் என்றும் பாராமல் சிரஞ்சீவியை மூச்சுத் திணற திணற கொலை செய்துவிட்டு இறந்துவிட்டானா? என்றும் சோதித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்" என்பது விசாரணையில் தெரிந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிந்த காவலாளர்கள் பிரதீப்பை கைது செய்தனர். 

மாணவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி பின்னர் கொலை செய்துள்ள சம்பவம் இந்தப் பகுதியில் பரவி பெரும் அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

 

click me!