
சேலம்
சேலத்தில் வீட்டில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.9 இலட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ராஜஸ்தானைச் சேர்ந்தவரிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
சேலம் மாவட்டம், பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, அந்த இடத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழு சென்று சோதனை நடத்தினர். அந்த குழுவிற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமைத் தாங்கினார்.
அப்போது, பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் 4-வது தெருவில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரின் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனோகர் சிங் (40) என்பவர் கிருஷ்ணமூர்த்தி வீட்டை வாடகைக்கு எடுத்து, புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து வீட்டில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.9 இலட்சம் இருக்குமாம். மேலும் இது தொடர்பாக மனோகர் சிங்கை பிடித்து அதிகாரிகள் அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.