ஆய்வாளர் ராஜேஸ்வரியால் மீட்கப்பட்ட இளைஞர்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!! | ChennaiFlood

By Narendran SFirst Published Nov 12, 2021, 12:25 PM IST
Highlights

#ChennaiFlood | காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் தூக்கி சென்று மீட்ட செனாய் நகரை சேர்ந்த உதயா என்னும் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் கடந்த 6 நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை தேங்கி வெள்ளக்காடானது. ஏற்கனவே தேங்கிய நீரை அகற்றும் பணி நடைபெற்று வந்த நிலையில் சென்னையில் மீண்டும் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் பல பகுதிகளில் இடுப்பளவு நீர் தேர்ங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை அடுத்து மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இரவு பகல் பாராமல் மீட்பு படையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாக கல்லறையிலேயே தங்கியுள்ளார். தொடர்ந்து மழையில் நனைந்ததால் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து உதயா மயங்கி விழுந்துள்ளார்.

 

இதற்கிடையே கல்லறை பகுதியில் மரம் விழுந்திருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சக காவலர்களுடன் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அங்கு, இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, சற்றும் யோசிக்காமல் தனது தோலில் அந்த இளைஞரை தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.  இதுக்குறித்து பேசிய அவர், பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி செய்த பிறகு, அவரைத் தூக்கிச் சென்றதாகவும் அப்போது ஆட்டோ ஒன்று அந்த வழியில் வந்ததால் அதில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார். மேலும் தாம் மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, பாதிக்கப்பட்டவரின் தாய் அவருடன் இருந்ததாகவும் தான், அவரிடம் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறியதோடு, காவல்துறை அவர்களுக்கு உதவும் என்றும் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், அச்சப்படத் தேவையில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மயங்கிய இளைஞரை சற்றும் யோசிக்காமல் தோளில் தூக்கி சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அவரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் சென்னை தலைமை செயலகத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு, பாராட்டு தெரிவித்ததோடு அதற்கான சான்றிதழையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதற்கிடையே காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் தூக்கி சென்று மீட்ட செனாய் நகரை சேர்ந்த உதயா என்னும் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

click me!