
அண்மை காலமாக திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், பள்ளிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகி விட்டது. சமீபத்திய நாட்களில் முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ரஜினி விட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் ரஜினி வீட்டுக்கு விரைந்து சென்றனர். ஆனால் ரஜினி கேட்டுக்கொண்டதால் அங்கு சோதனை ஏதும் நடத்தவில்லை என கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஜினி வீட்டுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தபோது அங்கு காவலர்கள் சோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகளை பிடிக்க திணறும் போலீஸ்
மர்ம நபர்கள் இதுபோல் பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் மிரட்டல் விடுக்கின்றனர். இப்படி தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கும் நபர்களை பிடிக்க முடியாமல் காவல் துறை திணறி வருகிறதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். காவலர்கள் துரிதமாக செயல்பட்டு இத்தகைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.